Wednesday 18 June 2014

ஒப்பாரி பாடல்கள்

ஒப்பாரி பாடல்கள்


ஏறக்குறைய இன்றைய காலகட்டத்தில் 98 சதவீதம் அழிந்து விட்டது என்றே கூறலாம். கிராமங்களில் வயதான ஒருவர் இறந்து விட்டால் என்றால் அவரை ஒப்பாரி பாட்ல் பாடி அவரது சாதனைகள் வேதனகளைச்சொல்லிதான் அனுப்பிவைப்பார்கள்.

மகளிர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு;கலைஞர் பாடும் ஒப்பாரிப் பாடல்களும் உண்டு. இறந்து போனவரின் உறவினர்களாகிய பெண்கள் ஒப்பாரி வைத்துப் பாடுவது நாம் அறிவதே. சில இடங்களில் சாவு நிகழ்ச்சியில் கூலி வாங்கிக் கொண்டு ஒப்பாரி பாடுவதற்கென்று கலைஞர்களே உள்ளனர் என்பது நாம் அறியத்தக்க செய்தி.

ஒப்பாரி பாடல் தமிழ் மக்களின் வாழ்க்கையோடும் அவர்களின் உணர்வோடும் பின்னிப்பினைந்த ஒன்று ஆனால் அது இன்றல்ல. மனிதரைக் கவரவல்ல உணர்ச்சி மிக்க பாடல்கள் தான் தாலட்டும், ஒப்பாரி பாடல்களும். மனிதனின் தொடக்க காலத்தில் பாடுவது தாலட்டு, அவன் வாழ்க்கை முடிந்து போகையில் பாடுவது ஒப்பாரி பாடல் ஆகும். தாய், தந்தை, மகன், மகள், கணவன், உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வே ஒப்பாரியாக வெளிப்படுகிறது.
நான் அறிந்தவரையில் எங்க ஊரில் பொன்னாத்தாள் என்ற ஒரு பாட்டி இருந்தார்கள் யாராவது வீட்டில் இறந்து விட்டார்கள் எனில் பொன்னாத்தாவை தான் கூப்பிடுவார்கள். வயதான வாழ்ந்து அனுபவித்த ஒருவர் இறந்து விட்டர் எனில் அங்கு ஒப்பாரி ரொம்ப பலமாக இருக்கும். அந்த வீடுகளில் ரேடியோ கட்டி ஒருநாள் முழுக்க பொன்னாத்தாள் மைக்பிடித்து ஒப்பாரி பாடல்களை பாட ஆரம்பிக்கும். அப்படி பாடும் போது அவரின் அருமை பெருமைகள் அனைத்தும் அப்பாடல்களில் வரும். ஆனால் இன்று கால வேகத்தில் ஒப்பாரி என்னும் கிராமியபாடல்களே அழிந்து விட்டது என்றே கூறலாம்.
நான் படித்த சில ஒப்பாரி பாடல்கள்....

இறந்தவர்களின் உறவு முறை அடிப்படையில் ஆரம்பிக்கும் முதல் வரி....

என்னை ஆளவந்த ராசாவே -மனைவிஎன்னப் பெத்த சீதேவியே- மகள்என்ர மகளே- தாய்என்ர மகனே- தாய்என்ர பிறவியரே- சகோதரி நான் பெறாமகனே-பெரியதாய் அல்லது சிறியதாய்



இவ்வாறு அழைத்து இப்பாடல்களை ஒரு ஓசை ஒழுங்குடன் பாடுவர் கேட்பவருக்கு இந்த ஓசை துக்கத்தைக் கொடுக்கும் .

மனைவியின் #ஒப்பாரி 


பயறு வறுத்தினமோ ஐயா என்ர ராசா
துரையே துரைவடிவே
உனக்கு வாய்க்கரிசி போட்டினமோ
உன்னை இழந்ததனால்
என்ர உதரமெல்லாம் பதறுதையோ 

பெண் கணவனை இழந்தால் சமூகம் அவளை மதிப்பதில்லை என்பதற்கான பாடல்....

என்னை ஆளவந்த ராசாவே
தட்டிலே மைஇருக்க
தாய்கொடுத்த சீர்இருக்க
தாய் கொடுத்த சீரிழந்தேன்
தரும் தாலி தானிழந்தேன்
தனி இருந்து வேலையென்ன
புண்ணியரை முன்னை வி;ட்டு
நான் பெண்ணிருந்து வேலையென்ன
 


முத்துப்பதித்த முகம்
என்ர ராசா
முழுநிலவாய் நின்ற :முகம்
நினைப்பேன் திடுக்கிடுவென்
உன்ர நினைவு வந்த நேரமெல்லாம்
போகக்கால் ஏவினதோ
பொல்லாதாள் தன்னைவிட்டு
நாக்குப் படைச்சவையள்
இனி நாகரியம் பேசுவினம்
மூக்குப் படைச்சவையள்
இனி முழுவியளம் பேசுவினம்
மூளி அலங்காரி
இவள் மூதேவி என்பினமே



தந்தைக்கும், கணவனுக்கும் பொறுந்தக்கூடிய பாடல்....

ஐயா நீ வாற வழியிலையோ
என்ர கண்ணுக்கு
வழிமறித்து நில்லனையா
நீமாண்ட இடத்திலையோ
மாமரமாய் நில்லனணை
வேலி அருகிலயோ நீ
வீரியமாய் நில்லனையா

தாய் இறந்த போது பாடிய பாடல் ஒன்று வருமாறு. 


என்னப் பெத்த சீதேவியே
கப்பல் சுணங்கிவரும் அம்மா
நீங்கள் போட்ட கடிதம் முன்ன வரும்
நான் கடிதத்தைக் கண்டவுடன்
கடிதத்தை உதறிவிட்டேன்
கண்ணீரை இறக்கிவிட்டேன்;
தோணி சுணங்கிவரும்
நீங்கள் போட்ட சுருள் ஓலை முன்ன வரும்
சுருள் ஓலை கண்டவுடன்
நான் சுறுக்காப் பயணமானேன்


மகன் இறந்து விட்டபோது தாய்பாடுவதாக அமைந்த பாடல்...

வாலைப்பராயமல்லோ
உனக்கு வயதுமிகச் சொற்பமல்லோ
தாலிக்கேர்ர நாட்பார்க்க
காவுக்கோர் நாளாச்சோ
கூறைக்கேர்ர் நாட்பார்க்க
கொள்ளிக்கோர் நாளாச்சோ
மஞ்சளால கோலமிட்டு உன்னை
மணவறைக்கு விடும் வேளையிலெ
கரியாலே கோலமிட்டு 
உன்னைகட்டைக்கோ அனுப்புகிறேன்....



இறந்தவர் வீட்டுக்கு இரண்டு நாள் கழித்து துக்கம் விசாரிக்க வருபவருக்கான பாடல்...


“ஊரோ இரண்டாச்சு
அதன் ஊடே கடலாச்சு
நாடோ ரெண்டாச்சு
அதன் நடுவே கடலாச்சு
ஓடுகிற தண்ணியில
ஓலை நீ விட்டிருந்தா
ஓடி வந்திருப்பன்” 

இப்படி பல வகையான பாடல்கள் நம் சமூகத்தில் பாடப்பட்ட நாட்டுப்புற ஒப்பாரி பாடல்கள் ஆகும். ஆனால் இன்று இவைகள் அழிந்துவிட்டன என்கிற போது வருத்தப்பட வேண்டி உள்ளது...

Tuesday 17 June 2014

பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்



வணக்கம் வலை நண்பர்களே!
இன்று பேஸ்புக்  மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) என்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.

எவ்வாறு இன்ஸ்டால் செய்வது?

முதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.
பின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்.


Download செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும். 

இன்ஸ்டால் செய்த பின்  task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும். 

 

க்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.

En

EN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும். 


டிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.


பின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, "வணக்கம்" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், "vanakkam" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும். 


மேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், "காட்டும்" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக "காட்டும்" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.


இவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.

சரி, இந்த google tamil input மூலம் பேஸ்புக்கில் எப்படி டைப் செய்வது என கேட்கறீர்களா?
ரொம்ப ஈசி///
பேஸ்புக் ஸ்டேடஸ் கட்டத்தில் கர்சரை வைத்து TN என்பதை செலக்ட் செய்து தமிழ் வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை டைப் செய்தால் தமிழில் வாக்கியங்கள் கிடைக்கும். அவ்வளவு தான். 

சிலர் google translate மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்புக்கில் பேஸ்ட் செய்வதாக தெரிகிறது. இம்முறையை பயன்படுத்தினால் காப்பி/பேஸ்ட் அவசியமில்லை. வேகமாக சாட் செய்யலாம்.
Google tamil input மொத்தம் 22மொழிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.


மேலும் விளக்கங்கள் அறிய கீழே உள்ள படத்தில் வாசியுங்கள்.


குறிப்பு:
1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொடர்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம். 

2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.

3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்

Saturday 14 June 2014

ஏழு சுரங்களின் பெயர்க் காரணங்கள் ......


இசையால் வசமாக இதையமுண்டோ 



1. ஷட்ஜம் (ச): ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஷட்ஜம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு)

2. ரிஷபம் (ரி): இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.

3. காந்தாரம் (க): காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது.

4. மத்திமம் (ம): ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது.

5. பஞ்சமம் (ப): ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து)

6. தைவதம் (த): தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது.

7. நிஷாதம் (நி) ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது.

சரிகமபதநிச 

Wednesday 11 June 2014

யானையின் தமிழ்ப்பெயர்கள்

தமிழின் பெருமைக்கு எல்லையே இல்லை !!

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் !

யானையின் தமிழ்ப்பெயர்கள்

யானை/ஏனை (கரியது)
வேழம் (வெள்ளை யானை)
களிறு
களபம்
மாதங்கம்
கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
உம்பர்
உம்பல் (உயர்ந்தது)
அஞ்சனாவதி
அரசுவா
அல்லியன்
அறுபடை
ஆம்பல்
ஆனை
இபம்
இரதி
குஞ்சரம்
இருள்
தும்பு
வல்விலங்கு
தூங்கல்
தோல்
கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
எறும்பி
பெருமா (பெரிய விலங்கு)
வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
ஒருத்தல்
ஓங்கல் (மலைபோன்றது)
நாக
பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
கும்பி
தும்பி (துளையுள்ள கையை உடையது)
நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
குஞ்சரம் (திரண்டது)
கரேணு
உவா (திரண்டது)
கரி (கரியது)
கள்வன் (கரியது)
கயம்
சிந்துரம்
வயமா
புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
தந்தி
மதாவளம்
தந்தாவளம்
கைம்மலை (கையை உடைய மலை போன்றத)
வழுவை (உருண்டு திரண்டது)
மந்தமா
மருண்மா
மதகயம்
போதகம்
யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)

பெண் யானையின் பெயர்கள்

பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி


யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)

கயந்தலை
போதகம்
துடியடி
களபம்
கயமுனி

வாழ்க தமிழ் ! வளர்க தமிழ் !!

Tuesday 10 June 2014

வாழ்கைக்கு தேவையான சில விசயங்கள்

வாழ்கைக்கு தேவையான சில விசயங்கள் 



1. வணங்கத்தகுந்தவர்கள் - தாயும்,தந்தையும்

2. வந்தால் போகாதது - புகழ், பழி

3. போனால் வராதது - மானம்,உயிர்

4. தானாக வருவது - இளமை,முதுமை

5. நம்முடன் வருவது - புண்ணியம், பாவம்,

6. அடக்க முடியாதது - ஆசை, துக்கம்

7. தவிர்க்க முடியாதது - பசி, தாகம்

8. நம்மால் பிரிக்க முடியாதது -பந்தம்,பாசம்

9. அழிவை தருவது - பொறாமை,கோபம்

10. எல்லோருக்கும் சமமானது -பிறப்பு,இறப்பு

11. கடைத்தேற வழி -உண்மையும்,உழைப்பும்

12. ஒருவன் கெடுவது - பொய் சாட்சி,செய் நன்றி மறப்பது

13. வருவதும் போவதும் - இன்பம்,துன்பம்

14. மிக மிக ந்ல்ல நாள் - இன்று

15. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

16. மிகவும் வேண்டாதது - வெறுப்பு

17. மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி

18. மிகக் கொடிய நோய் - பேராசை

19. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

20. கீழ்தரமான விஷயம் - பொறாமை

21. நம்பக்கூடாதது - வதந்தி

22. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

23. செய்யக்கூடாதது - தவறுகள்

24. செய்ய வேண்டியது - உதவி

25. விலக்க வேண்டியது - விவாதம்

26. உயர்வுக்கு வழி - உழைப்பு

27. நழுவ விடக்கூடாதது - வாய்ப்பு